வெள்ளி, 2 டிசம்பர், 2016

சிந்து பாடுவேனோ?


 சிந்து பாடுவேனோ?

            (எடுப்பு)

சிந்து பாடு வேனோ உடல்
சிலிர்க்கப் பாடு வேனோ                      (சிந்து)

            (தொடுப்பு)

சந்தம் நிறைகிற சதிராடும் தமிழால்
சாதனை புரிகிற செழித்திடும் மொழியால்      (சிந்து)

            (முடிப்பு)

அமைதியாய் அமர்ந்திடும் பாவலர் நெஞ்சில்
அரவரம் புரிந்திடும் காதலர் நெஞ்சில்
குரல்வளம் கொடுத்திடும் பாடகர் நெஞ்சில்

கொஞ்சிடக் குளிர்ந்திடும் என்னவர் நெஞ்சில்...   (சிந்து)

மலர்தரும் மதுவென மயக்கிடும் வண்ணம்
வலம்வரும் தேரென வடிவொளிர் வண்ணம்
நிலந்தரும் பயிரென நெகிழ்ந்துரும் வண்ணம்
நலம்தரும் நெறியென நற்றமிழ் மின்னும்     (சிந்து)

உழைப்பவர் வாழ்வினில் ஒளிபெற வேண்டும்
உலகினில் உயர்வுகள் உலாவர வேண்டும்
தழைத்திடும் சிந்தனை புகழ்பெற வேண்டும்
தரணியைத் தண்டமிழ் ஆண்டிட வேண்டும்   (சிந்து)


பாவலர் அருணா செல்வம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக